2-வது அலையில் புதிய உச்சம்: ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று


2-வது அலையில் புதிய உச்சம்:  ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 26 April 2021 6:47 PM GMT (Updated: 26 April 2021 6:47 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை:
123 பேருக்கு தொற்று
கொரோனாவின் 2-வது அலை தமிழகத்தில் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து291 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 93 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து376 ஆக உயர்ந்தது.
கொரோனா பரிசோதனை
மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்க 755 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம், அண்ணாசிலை, டி.வி.எஸ். கார்னர், திருவப்பூர் பகுதியில் கொரோனா பரிசோதனை நடவடிக்கைகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
அன்னவாசல்
அன்னவாசல் ஒன்றியம், இருந்திராபட்டி ஊராட்சி திம்மயம்பட்டியில் 42 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சி சார்பில் திம்மயம்பட்டி பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. திம்மயம்பட்டி குடியிருப்பு பகுதிகள் முழுவதும் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் முககவசம் அணியவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் சுகாதார ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் கிராமங்கள் முழுவதும் கிருமிநாசினி தொளிக்கப்பட்டு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.

Next Story