வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை தேர்தல் அதிகாரி தகவல்


வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 27 April 2021 4:53 PM GMT (Updated: 27 April 2021 4:53 PM GMT)

வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரி தெரிவித்தார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவடைந்தது. அதில் பதிவான வாக்குப் பதிவு எந்திரங்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டு, 4 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற 2-ந்தேதி நடக்கிறது.

வாக்கு எண்ணும் பணிக்காக, தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மொத்தம் 126 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணும் பணிக்காக 17 கண்காணிப்பாளர்கள், 17 உதவியாளர்கள் மற்றும் 17 நுண் பார்வையாளர்கள் என 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 153 கண்காணிப்பாளர்கள், 153 உதவியாளர்கள், 153 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

4 வாக்கு எண்ணும் மையங்கள்

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்லும் வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் அல்லது தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று அறி வுறுத்தப்பட்டது.

அதன்படி கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரி, பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகம், விருத் தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி, சி.முட்லூர் அரசு கல்லூரி ஆகிய 4 வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்களுக்கு இன்று (புதன்கிழமை) அந்தந்த  தாலுகா பகுதியில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று பரிசோதனை

இது பற்றி தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்லும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான சான்றிதழை காண்பித்தால் தான் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி வேட்பாளர்கள், முகவர்கள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு நாளை (இன்று) அந்தந்த தாலுகா அலுவலகங்கள் மூலம் பரிசோதனை செய்து கொள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் என்றார்.

இதில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதி வாக்கு எண்ணும் மையமான கடலூர் பெரியார் அரசு கல்லூரிக்கு கண் காணிப்பாளர்களை தவிர இதர அலுவலர்கள், போலீசார் என சுமார் 800 பேர் வரை செல்ல உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

Next Story