சிமெண்டு பூச்சு விழுந்து பெண் படுகாயம்


சிமெண்டு பூச்சு விழுந்து பெண் படுகாயம்
x
தினத்தந்தி 27 April 2021 6:09 PM GMT (Updated: 27 April 2021 6:09 PM GMT)

ராதாநல்லூர் கிராமத்தில் தொகுப்பு வீட்டின் சிமெண்டு பூச்சு விழுந்து பெண் படுகாயம் அடைந்தார். மறுசீரமைப்பு செய்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி:
ராதாநல்லூர் கிராமத்தில் தொகுப்பு வீட்டின் சிமெண்டு பூச்சு விழுந்து பெண் படுகாயம் அடைந்தார். மறுசீரமைப்பு செய்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிமெண்டு பூச்சு விழுந்து பெண் படுகாயம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட 42-ராதாநல்லூர் கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் 1991-ம் ஆண்டு கட்டப்பட்ட நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இன்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த கிராமத்தில் உள்ள தொகுப்பு வீட்டில் புனிதா (வயது 45) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தொகுப்பு வீட்டின் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து புனிதாவின் தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
மறு சீரமைப்பு செய்ய கோரிக்கை
மேலும் சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டாரம் முழுவதும் ஆயிரக்கணக்கான அரசின் தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதில் வசித்து வரும் ஏழை மக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்துடனே வசித்து வருகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் தொகுப்பு வீடுகள் இடிந்து விழக்கூடும் என்பதால், இதுகுறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளித்தோம்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தொகுப்பு வீடுகளை மறுசீரமைப்பு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story