வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து 35 பவுன் நகைகள் திருட்டு


வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து 35 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 27 April 2021 7:49 PM GMT (Updated: 27 April 2021 7:49 PM GMT)

லப்பைக்குடிக்காட்டில் பட்டப்பகலில் வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

மங்களமேடு:

மருத்துவமனைக்கு சென்றனர்
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரை சேர்ந்தவர் அப்துல்லா(வயது 50). இவர் துபாயில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் விடுமுறையில் துபாயில் இருந்து ஊருக்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு அப்துல்லா, தனது மனைவி மற்றும் 3 மகன்களுடன் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக சென்றார்.
35 பவுன் நகைகள் திருட்டு
பின்னர் இரவு 8 மணி அளவில் திருச்சியில் இருந்து லப்பைக்குடிக்காட்டிற்கு திரும்பிய அவர்கள், வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவருகே உள்ள ஜன்னலில் கம்பிகள் அறுக்கப்பட்டு, 2 கம்பிகள் அகற்றப்பட்டிருந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டிற்குள் பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து அப்துல்லா மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் அங்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஜன்னல் மற்றும் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
பட்டப்பகலில்...
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஜன்னல் கம்பிகளை அறுத்து வீட்டிற்குள் சென்று, பீரோவை உடைத்து அதில் இருந்த 35 பவுன் நகைகளை திருடிச்சென்றிருக்கலாம் என்றும், பட்டப்பகலில் இந்த திருட்டு சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றியிருக்கலாம் என்றும், தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story