பணம் இல்லாததால் கொரோனாவுக்கு பலியானவரின் உடலை மருத்துவமனையில் விட்டு சென்ற மனைவி


பணம் இல்லாததால் கொரோனாவுக்கு பலியானவரின் உடலை மருத்துவமனையில் விட்டு சென்ற மனைவி
x
தினத்தந்தி 27 April 2021 10:15 PM GMT (Updated: 27 April 2021 10:15 PM GMT)

பெங்களூருவில் ரூ.4 லட்சம் கட்டணம் செலுத்தும்படி கூறியதால் கொரோனாவுக்கு பலியானவரின் உடலை தனியார் மருத்துவமனையிலேயே மனைவி விட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் ரூ.4 லட்சம் கட்டணம் செலுத்தும்படி கூறியதால் கொரோனாவுக்கு பலியானவரின் உடலை தனியார் மருத்துவமனையிலேயே மனைவி விட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

தொழிலாளிக்கு கொரோனா

விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளி, பெங்களூருவில் வசித்து வந்தார். அவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு தொழிலாளிக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து, அந்த தொழிலாளிக்கு கொரோனாவுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, அந்த தொழிலாளியை, அவரது மகள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க முயன்றார். ஆனால் மாநகராட்சியிடம் இருந்து தொழிலாளியின் மகளுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்த தொழிலாளி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ரூ.4 லட்சம் கட்டணம்

இந்த சிகிச்சைக்காக தொழிலாளியின் மனைவி முதலில் தனியார் மருத்துவமனையில் ரூ.20 ஆயிரம் செலுத்தி இருந்தார். அவர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக, அவரது மனைவி, மகளிடம் கூறி இருந்தார்கள். பின்னர் அந்த தொழிலாளியின் உடல் நிலை மோசமானதாக தெரிகிறது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த தொழிலாளி பரிதாபமாக இறந்து விட்டார்.

இதையடுத்து, சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு உடலை வாங்கி செல்லும்படி மருத்துமனை நிர்வாகம், அவரது மனைவியிடம் கூறியது. அதாவது கொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததற்காக ரூ.4 லட்சம் கட்டணம் செலுத்தும்படி மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார்.

உடலை வாங்காமல் சென்ற...

அதே நேரத்தில் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை, அதனால் கணவரின் உடலுக்கு நீங்களே இறுதி சடங்கு நடத்தி முடித்து விடுங்கள் எனக் தொழிலாளியின் மனைவி, மருத்துமவனை நிர்வாகிகளிடம் கூறினார். மேலும் கணவரின் உடலை வாங்காமல் அவர் மருத்துவமனையில் இருந்து சொந்த ஊரான விஜயாப்புராவுக்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தன்னுடைய தந்தைக்கு டாக்டர்கள் சரியாக சிகிச்சை அளிக்காத காரணத்தால் தான் அவர் உயிர் இழப்பதிருப்பதாக, தொழிலாளியின் மகள் குற்றச்சாட்டு கூறியுள்ளார். கொரோனாவுக்கு பலியான கணவரின் உடலை பெற தனியார் மருத்துவமனை ரு.4 லட்சம் கேட்டதால், உடலை வாங்காமல் மனைவி சென்ற சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story