ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 414 பேருக்கு கொரோனா- மூதாட்டி பலி


ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 414 பேருக்கு கொரோனா- மூதாட்டி பலி
x
தினத்தந்தி 27 April 2021 11:47 PM GMT (Updated: 27 April 2021 11:47 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 414 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் மூதாட்டி ஒருவர் பலியானார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 414 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் மூதாட்டி ஒருவர் பலியானார்.
414 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தினமும் தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வது பொதுமக்களை அச்சமடைய வைத்து உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினமும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள். அதுவே மக்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இதுவரை இல்லாத வகையில் 515 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள். பெரும் நகரங்களுக்கு நிகராக ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டு உள்ளது.
மாநில சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியிலின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 414 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 811 ஆக உயர்ந்தது.
மூதாட்டி பலி
மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 233 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். இதுவரை மொத்தம் 16 ஆயிரத்து 998 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளார்கள். தற்போது 2 ஆயிரத்து 656 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 1,355 பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.
கொரோனாவுக்கு மேலும் ஒரு மூதாட்டி பலியாகி உள்ளார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 78 வயது மூதாட்டி கடந்த 25-ந் தேதி பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 157 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.

Next Story