ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் 2 பேர் சரண்


ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் 2 பேர் சரண்
x
தினத்தந்தி 28 April 2021 6:28 PM GMT (Updated: 28 April 2021 6:28 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர்.

புதுக்கோட்டை, ஏப்.29-
புதுக்கோட்டை அருகே வாலிபர் கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அரிவாளால் வெட்டி கொலை
புதுக்கோட்டை அருகே செவலூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையா (வயது24). இவரது அண்ணன் விஜயகுமார் (27). ஒரு கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு பொன்னையா புதுக்கோட்டை கோர்ட்டில் கடந்த 26-ந் தேதி ஆஜராகி விட்டு தனது அண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது செல்லுக்குடி விலக்கு சாலையில் மர்மநபர்கள், மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவர்கள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் விஜயகுமார் ரத்த வெள்ளத்தில் பிணமானார். பொன்னையா படுகாயமடைந்தார்.
கோர்ட்டில் 2 பேர் சரண்
இந்த சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவத்தை கூலிப்படையை வைத்து அரங்கேற்றியது தெரியவந்தது. கூலிப்படையினர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயகுமார் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் அப்பகுதியை சேர்ந்த மாரியப்பன் (46), கந்தசாமி (37) ஆகியோர் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருக்கோகர்ணம் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய போலீசார் தயாராகி வருகின்றனர்.
அரசு ஊழியர் கைது
இதற்கிடையில்  விஜயகுமார் கொலை சம்பவத்தில் தொடர்புடைய வெங்கடேசன் (41) என்பவரை திருக்கோகர்ணம் போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான இவர் நாகுடியில் பொதுப்பணித்துறையில் பாசன உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆகும்.
விஜயகுமார் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணமேல்குடியில் இசக்கிமுத்து என்பவரை விஜயகுமாரின் தம்பி பொன்னையா கொலை செய்தார். அதற்கு பழி தீர்க்க இந்த சம்பவம் நடந்தது. இதில் கைதான வெங்கடேசன், கொலையான இசக்கிமுத்துவின் உறவினர் ஆவார். வெங்கடேசன் மற்றும் அவரது உறவினர்கள் திட்டமிட்டு இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story