நகை-பணத்திற்கு ஆசைப்பட்டு கல்லூரி மாணவியை கொன்ற அண்ணன் கைது


நகை-பணத்திற்கு ஆசைப்பட்டு கல்லூரி மாணவியை கொன்ற அண்ணன் கைது
x
தினத்தந்தி 28 April 2021 6:53 PM GMT (Updated: 28 April 2021 6:53 PM GMT)

நகை-பணத்திற்கு ஆசைப்பட்டு கல்லூரி மாணவியை கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை, ஏப்.29-
புதுக்கோட்டையில் கல்லூரி மாணவி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. நகை-பணத்திற்கு ஆசைப்பட்டு கொலை செய்த அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கல்லூரி மாணவி
புதுக்கோட்டை பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி (வயது44). இந்த தம்பதியினரின் ஒரே மகள் லோகப்பிரியா (20). இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் எம்.காம் முதலாமாண்டு படித்து வந்தார். பழனியப்பன் மின்சார வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டு அலுவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். கணவர் இறந்ததால் அவரது மனைவி சிவகாமிக்கு மின்சார வாரிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அவர் புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் வேலைக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல சிவகாமி வேலைக்கு சென்றார். வீட்டில் லோகப்பிரியா மட்டும் இருந்துள்ளார்.
கொலை சம்பவம்
 இந்த நிலையில் சிவகாமி பணி முடிந்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு படுக்கை அறையில் நைட்டி அணிந்தநிலையில் முகத்தில் ரத்த காயங்களுடன் லோகப்பிரியா பிணமாக கிடந்தார். இதனை கண்ட அவர் அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
 இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் கணேஷ் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லோகப்பிரியாவை மர்மநபர் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரிந்தது. மேலும் வீட்டில் 30 பவுன் நகைகள் இருந்ததாகவும், அதனை கொள்ளையடித்து விட்டு சென்றதாகவும் கூறப்பட்டது. வீட்டில் அவர் பயன்படுத்தி வந்த ஸ்கூட்டரையும் கொலையாளி திருடிச்சென்றிருந்தார்.
போலீசார் விசாரணை
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பகுதி பொதுமக்கள் சோகத்துடன் திரண்டிருந்தனர். கொலையான லோகப்பிரியாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை சம்பவம் நடந்த வீட்டில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டன. ஆனால் நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சிறிது தூரம் சென்று நின்று விட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். லோகப்பிரியாவை அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் நபரே கொன்று இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்து தங்களது புலன்விசாரணையை தொடங்கினர்.
 இதில் லோகப்பிரியாவுக்கு ஒரு காதலன் இருப்பதும் தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்தனர். இதேபோல சிவகாமியின் அக்காள் மகனான திருமயத்தை சேர்ந்த சுரேஷ் (29) நேற்று முன்தினம் மதியம் அவரது வீட்டிற்கு வந்திருப்பதாக லோகப்பிரியா தன்னிடம் செல்போனில் பேசும் போது தெரிவித்ததாகவும் சிவகாமி போலீசாரிடம் கூறினார். மேலும் அவருக்கு பணத்தேவை அதிகம் இருப்பதால் அடிக்கடி பணம் கேட்டதாகவும் தெரிவித்தார்.
அண்ணன் கைது
இதைத்தொடர்ந்து சுரேசை போலீசார் சல்லடை போட்டு தேடினர். நேற்று முன்தினம் இரவே அவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் துருவி, துருவி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் லோகப்பிரியாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவரை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 10 கிராம் தங்க சங்கிலி, அவரது செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதாகவும், ஸ்கூட்டரையும் எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சுரேசை போலீசார் கைது செய்தனர். நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு லோகப்பிரியாவை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
மேலும் தனக்கு கடன் அதிகமாக இருந்ததால் பணம் தேவைப்பட்டதாகவும், வீட்டில் லோகப்பிரியா மட்டும் தனியாக இருந்ததால் அவரை கொலை செய்து நகையை கொள்ளையடித்ததாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். லோகப்பிரியாவை கம்பி போன்ற கூர்மையான ஆயுதத்தால் முகம் மற்றும் முதுகுப்பகுதியில் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொன்றிருப்பதாக போலீசார் கூறினர். கொள்ளையடித்த நகையை ஒரு அடகு கடையில் அவர் வைத்துள்ளார். அதனை போலீசார் கைப்பற்றினர். மேலும் ஸ்கூட்டரை ஒருவரிடம் விற்றுள்ளார். அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான சுரேஷ், கொலை செய்யப்பட்ட லோகப்பிரியாவுக்கு உறவு முறையில் அண்ணன் ஆவார்.
உடல் ஒப்படைப்பு
கொலை சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கொலையாளியை போலீசார் கைது செய்தனர். கைதான சுரேசை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட லோகப்பிரியாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கை உறவுமுறை கொண்ட கல்லூரி மாணவியை அண்ணன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவு குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story