வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை 9 இடங்களில் நடைபெற்றது


வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை 9 இடங்களில் நடைபெற்றது
x
தினத்தந்தி 28 April 2021 6:53 PM GMT (Updated: 28 April 2021 6:53 PM GMT)

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை 9 இடங்களில் நேற்று நடந்தது.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும்
அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
9 இடங்களில் நடைபெற்றது
திருச்சி, ஏப்.29-
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை 9 இடங்களில் நேற்று நடந்தது.
தேர்தல் ஆணையம் உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்ட மன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 4 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வருகிற 2-ந்தேதி காலை 8 மணி முதல் மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதில் நுாற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

வேட்பாளர்களின் சார்பில் முகவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ள அனைத்து அரசு அலுவலர்கள், மைக்ரோ அப்சர்வர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

9 இடங்களில் பரிசோதனை

இந்த உத்தரவின்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் இப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான சிறப்பு கொரோனா பரிசோதனை முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாம் மாவட்டம் முழுவதும் தொகுதிக்கு ஒரு இடம் வீதம் 9 இடங்களில் நேற்று காலை முதல் மாலை வரை நடந்தது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், மைக்ரோ அப்சர்வர்கள் வந்து பரிசோதனை செய்து கொண்டனர். பலர் தடுப்பூசியும் போட்டுக்கொண்டனர். 

மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகம், திருச்சி மேற்கு தொகுதி அலுவலர்களுக்கு பெரியமிளகுபாறை ஆரம்ப சுகாதார நிலையம், திருச்சி கிழக்கு தொகுதி அலுவலர்களுக்கு அரியமங்கலம் கோட்ட அலுவலகம், திருவெறும்பூர் தாலுகா அலுவலகம், லால்குடி தொகுதிக்கு லால்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் தொகுதிகளுக்கு அந்தந்த தாலுகா அலுவலகங்களிலும் இந்த சிறப்பு முகாம் நடந்தது.

Next Story