கர்நாடகாவில் முழு ஊரடங்கு: தமிழகத்தில் இருந்து செல்லும் பஸ்கள் எல்லையில் தடுத்து நிறுத்தம்


கர்நாடகாவில் முழு ஊரடங்கு: தமிழகத்தில் இருந்து செல்லும் பஸ்கள் எல்லையில் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 28 April 2021 9:18 PM GMT (Updated: 28 April 2021 9:18 PM GMT)

கர்நாடகாவில் முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் பஸ்கள் இரு மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன.

கர்நாடகாவில் முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் பஸ்கள் இரு மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன.
கர்நாடகாவில் முழு ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் நேற்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் தமிழக-கர்நாடக மாநில எல்லை பகுதியில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள புளிஞ்சூர், பாரதிபுரம், பகுதியில் கர்நாடக மாநில போலீசார் சோதனை சாவடி அமைத்து தீவிரமாக கண்காணிக்கின்றனர். இதனால் நேற்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் சோதனை சாவடிகளிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டன.
பஸ்கள் இயக்கம் நிறுத்தம்
 சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் மைசூரு, பெங்களூரு செல்லக்கூடிய பயணிகள் காத்துக் கிடந்தனர். குழந்தைகளுடன் வந்தவர்கள் பெரும் அவதிப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கமாக இருமாநில எல்லையில் உள்ள புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக சத்தியமங்கலம், தாளவாடி வரை செல்லும். ஆனால் புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் பஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் மாற்றுப்பாதையான தலமலை வழியாக சத்தியமங்கலம், தாளவாடி வரை பஸ்கள் சென்று வருகிறது. எனினும் தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டும் வழக்கம்போல் கர்நாடகாவுக்குள் சென்று வருகின்றன.
கோரிக்கை
தாளவாடி, சத்தியமங்கலம் செல்லும் வாகனங்களை மட்டும் புளிஞ்சூர் வழியாக செல்ல அனுமதி அளிக்கவேண்டும். தலமலை பாதை வனச்சாலை என்பதால் மாலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாது. எனவே புளிஞ்சூர் சாலை வழியாக தாளவாடி, சத்தியமங்கலத்துக்கு வாகனங்கள் செல்ல அனுமதி பெற்றுதரவேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்தியூர்
ஈரோட்டில் இருந்து அந்தியூர் வழியாக மைசூருக்கு தமிழ்நாடு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் அந்தியூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையான கர்காகண்டி நால்ரோடு சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன. அதேபோல் மற்ற வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.
கர்நாடக மாநிலத்தில் இருந்து மிகவும் அத்தியாவசிய பொருளான மருந்து-  மாத்திரைகள் மற்றும் உணவு பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

Related Tags :
Next Story