கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டிலேயே சாவு


கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டிலேயே சாவு
x
தினத்தந்தி 28 April 2021 9:31 PM GMT (Updated: 28 April 2021 9:31 PM GMT)

ஆஸ்பத்திரியில் படுக்கை கிடைக்காததால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டிலேயே இறந்தார். கணவர், மகளின் கண்எதிரே இந்த பரிதாபம் நடந்துள்ளது.

பெங்களூரு: ஆஸ்பத்திரியில் படுக்கை கிடைக்காததால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டிலேயே இறந்தார். கணவர், மகளின் கண்எதிரே இந்த பரிதாபம் நடந்துள்ளது.

வீட்டில் சிகிச்சை

பெங்களூருவில் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை கிடைக்காமல் உயிரை இழக்கும் சம்பவங்கள் பெங்களூருவில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதுபோல், பெங்களூரு வித்யாரண்யபுராவில் ஆஸ்பத்திரியில் படுக்கை  கிடைக்காமல் வீட்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் பலியான பரிதாபம் நடந்துள்ளது.
வித்யாரண்யபுராவில் ஒரு பெண் வசித்து வந்தார். 

அவருக்கு திருமணமாகி கணவரும், மகளும் உள்ளனர். அந்த பெண் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் கடந்த 26-ந் தேதி பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அந்த பெண் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றார்.

பெண் சாவு

நேற்று முன்தினம் இரவு அந்த பெண்ணுக்கு திடீரென்று மூச்சு திணறல் உண்டானது. இதையடுத்து, தனது தாயை தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது மகள் அழைத்து சென்றார். ஆனால் ஆஸ்பத்திரிகளில் படுக்கை இல்லை என்று கூறி விட்டதால், அந்த பெண் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். சிகிச்சை கிடைக்காமல் உயிருக்கு போராடிய அந்த பெண் இரவு 10 மணியளவில் கணவர், மகள் கண்முன்னே பரிதாபமாக உயிர் இழந்தார்.

தனது கண்முன்னே தாய் உயிர் இழந்ததை கண்டு அவரது மகள் கதறி அழுதார். இந்த நிலையில், மனைவி உயிர் இழந்த அதிர்ச்சியில் அவரது கணவரும் மயக்கம் போட்டு விழுந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அந்த நபரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதே நேரத்தில் தனது தாய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காத காரணத்தாலும், ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடைக்காத காரணத்தால் உயிர் இழந்திருப்பதாக மகள் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Next Story