சேலத்தில் இருந்து கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி, 6 வாகனங்கள் பறிமுதல்-ஒருவர் கைது
![சேலத்தில் இருந்து கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி, 6 வாகனங்கள் பறிமுதல்-ஒருவர் கைது சேலத்தில் இருந்து கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி, 6 வாகனங்கள் பறிமுதல்-ஒருவர் கைது](https://img.dailythanthi.com/Articles/2021/Apr/202104290512135305_17-tonnes-of-ration-rice-smuggled-from-Salem-6-vehicles_SECVPF.gif)
சேலத்தில் இருந்து கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி மற்றும் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்:
சேலத்தில் இருந்து கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி மற்றும் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ரேஷன் அரிசி கடத்த முயற்சி
சேலம் அமானி கொண்டலாம்பட்டி அருகே உள்ள மல்லக்கா நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆட்டோ, மொபட்டுகள் உள்ளிட்ட சில வாகனங்களில் இருந்து லாரியில் விலையில்லா ரேஷன் அரிசியை ஏற்றுவதாக சேலம் குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கிருந்த மணியனூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 34) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சேலத்தில் இருந்து ரேஷன் அரிசியை வெளியூருக்கு லாரியில் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். பின்னர் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து 17 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரி, ஆட்டோ, மொபட்டுகள் என 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வெளியூருக்கு கடத்த முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story