பந்தலூரில் 17 வயது சிறுமி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


பந்தலூரில் 17 வயது சிறுமி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 29 April 2021 2:29 PM GMT (Updated: 29 April 2021 2:29 PM GMT)

பந்தலூரில் 17 வயது சிறுமி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பந்தலூர்

பந்தலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த 2020-ம் ஆண்டு 22 வயது வாலிபருடன் திருமணம் நடைபெற இருந்தது. இதையறிந்த சமூகநலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தி பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். 

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மீண்டும் சிறுமிக்கும் அந்த 22 வயது வாலிபருக்கும் வேறொரு இடத்தில் வைத்து திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் அந்த வாலிபர், சிறுமியுடன் அதே பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சிறுமியை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை நடத்தினர். இதில் அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து அதிகாரிகள் தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கியதாக பந்தலூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story