வாணியம்பாடியில் சூப்பர் மார்க்கெட் உள்பட 6 கடைகளுக்கு ‘சீல்’


வாணியம்பாடியில் சூப்பர் மார்க்கெட் உள்பட 6 கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 29 April 2021 4:25 PM GMT (Updated: 29 April 2021 4:25 PM GMT)

வாணியம்பாடியில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட சூப்பர் மார்க்கெட் உள்பட 6 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

வாணியம்பாடி

உதவி கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொரோனா நோய் தொற்றால் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் தற்போது 50 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் வாணியம்பாடி உதவி கலெக்டர் காயத்திரிசுப்பிரமணி வாணியம்பாடி நகரம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

6 கடைகளுக்கு ‘சீல்’

அப்போது காதர்பேட்டையில் ஊரடங்கு கட்டுபாட்டு விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த சூப்பர் மார்கெட்டுக்கு ‘சீல்’ வைத்தார். தொடர்ந்து பஸ் நிலையம் மற்றும் நியூடவுன் பகுதியில் விதிகளை மீறி வாடிக்கையாளர்களை அமர வைத்து செயல்பட்ட 2 டீ கடைகளுக்கும், சமூக இடைவெளி இல்லாமல் இயங்கி வந்த 3 கடைகளுக்கும் சீல் வைத்தார். 

விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள், வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார்.

Next Story