கடன் தொல்லையால் பெண் தற்கொலை


கடன் தொல்லையால் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 29 April 2021 6:12 PM GMT (Updated: 29 April 2021 6:12 PM GMT)

கீழமணக்குடியில் கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்தாமரைகுளம், 
கீழமணக்குடியில் கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
மீனவர் மனைவி
குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே கீழமணக்குடி வாடிதெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 44), மீனவர். இவருடைய மனைவி மைக்கேல் ராணி (42). இவர்களுக்கு தீஸ்மா (23) என்ற மகளும், ஜார்ஜ் (18) என்ற மகனும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மகள் தீஸ்மாவுக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்காக மைக்கேல் ராஜ் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். பின்னர், போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். 
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் மைக்கேல் ராஜ் கேரள மாநிலம் கொல்லத்துக்கு மீன்பிடி தொழிலுக்காக சென்றார். இதைதொடர்ந்து கீழமணக்குடி வீட்டில் மைக்கேல் ராணி இருந்தார். அப்போது, கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால், கடந்த சில நாட்களாக மைக்கேல் ராணி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். 
நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் அவரது வீடு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மைக்கேல் ராணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கொல்லத்தில் இருந்த மைக்கேல் ராணியின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
மேலும், தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜன் மற்றும் ஜான் கென்னடி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மைக்கேல் ராணியின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story