வனவிலங்குகள் சரணாலயத்தில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்


வனவிலங்குகள் சரணாலயத்தில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்
x
தினத்தந்தி 29 April 2021 6:23 PM GMT (Updated: 29 April 2021 6:23 PM GMT)

கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் கொன்றை மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.

வேதாரண்யம்:
கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் கொன்றை மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
வன விலங்குகள் சரணாலயம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் மற்றும் பல்வேறு பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கொன்றை மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கொன்றை மரங்களில் மலர்கள் மலரும்.  மஞ்சள் நிறத்தில்  காணப்படும் இந்த மலர்கள் சரம், சரமாக தொங்குவதால் இதனை சரக்கொன்றை என மக்கள் அழைக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது கொன்றை மரங்களில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. சில மரங்களில் இலைகள் முழுவதும் உதிர்ந்த நிலையில் மலர்கள் மட்டும் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்குவதால் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது.
பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்
இந்த மரங்கள் உறுதித்தன்மை குறைவு என்பதால் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலால் பெரிதும் சேதம் அடைந்தன. இந்நிலையில் மீண்டும் அந்த மரங்கள் வளர்த்து கொன்றை மலர்கள் தற்போது பூத்து குலுங்குகின்றன. சில மரங்கள் காய்க்க தொடங்கி உள்ளது. இதன் காய்கள் பார்ப்பதற்கு முருங்கைக்காய் போன்று  நீளமாக இருக்கும். இதன் பூ,  இலை, மரப்பட்டை, வேர் ஆகியவை மருத்துவ குணமுடையதாகும்.
 சங்ககாலம் தொட்டு பல சிறப்புகளை பெற்ற அந்த மஞ்சள் நிற கொன்றை மலர்கள் கோடியக்கரை வனப்பகுதியில் மஞ்சள் போர்வை விரித்தது போல எங்கும் காணப்படுவது இயற்கை ஆர்வலர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொன்றை மலர் கேரள மாநிலம், தாய்லாந்து நாட்டிலும் வளர்கின்றன.

Next Story