ராசிபுரம் அருகே வெவ்வேறு விபத்துகளில் விவசாயிகள் 3 பேர் பலி


ராசிபுரம் அருகே வெவ்வேறு விபத்துகளில் விவசாயிகள் 3 பேர் பலி
x
தினத்தந்தி 29 April 2021 7:50 PM GMT (Updated: 29 April 2021 8:29 PM GMT)

ராசிபுரம் அருகே வெவ்வேறு விபத்துகளில் விவசாயிகள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ராசிபுரம்,

ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒண்டிக்கடை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 57). விவசாயி. ஒண்டிக்கடை அருகே உள்ள வெள்ளரி பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (71). விவசாயி. இருவரும் உறவினர்கள். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை ஒண்டிகடையிலிருந்து மங்களபுரத்திற்கு மொபட்டில் சென்றனர். 
மங்களபுரத்தில் செய்யப்பட்டு வரும் கோவில் கிரிலை பார்ப்பதற்காக அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. 

பின்னர் அவர்கள் மங்களபுரத்தில் இருந்து வாழப்பாடி செல்லும் பிரிவு ரோடு அருகே வந்தபோது அவர்களுக்கு பின்னால் ஆத்தூரில் இருந்து மங்களபுரத்தை நோக்கி வந்த கார் ஒன்று மொபட்  மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜெயராமனை சேலத்திற்கும், ரங்கசாமியை ஈரோடுக்கும் கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான ஜெயராமன் மற்றும் ரங்கசாமி ஆகியோரின் உடல்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதேபோல் முள்ளுக்குறிச்சி அருகே உள்ள தெற்குபாலாத்துக்காட்டை சேர்ந்த விவசாயி குணசேகரன் (56) என்பவர் தம்மம்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.  அவர் தும்பல்பட்டி அருகே வந்தபோது எதிரே முள்ளுக்குறிச்சியிலிருந்து சென்ற சரக்கு ஆட்டோ ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். 

இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வெவ்வேறு விபத்துகளில் விவசாயிகள் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதிகளில் உள்ள உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story