காஞ்சீபுரம் மாவட்டத்தில் போலி பூச்சி மருந்து விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் அதிகாரி தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் போலி பூச்சி மருந்து விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 30 April 2021 2:50 AM GMT (Updated: 30 April 2021 2:50 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கோல்டி பிரேமாவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வெளிமாநிலத்தில் போலியான உயிரி பூச்சி மருந்துகளுடன் இதர பூச்சிக்கொல்லி மருந்துகளை கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவது குறித்து புகார் எழுந்துள்ளது. ஆகவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதனால் பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு அனைத்து பூச்சி மருந்து விற்பனை கடைகளை உரிய ஆய்வு மேற்கொள்ள முடுக்கி விட்டுள்ளனர். அந்த ஆய்வின் போது போலியான உயிரி பூச்சி மருந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டாலோ, போலி உயிரி பூச்சி மருந்துகளுடன் இதர பூச்சிக்கொல்லி மருந்துகளை கலப்படம் செய்து விற்பனை செய்வது தெரிய வந்தாலோ உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் பூச்சிக்கொல்லிகள் சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறான போலி உயிரி பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கான அங்கக சான்று கிடைக்க பெறுவது கடினம். தவிரவும் விலை பொருட்களின் தரம் மற்றும் மதிப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பான புகார்களை உரிய வட்டார வேளாண் உதவி இயக்குனர்களிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Next Story