கீழடியில் பழங்கால தங்க ஆபரணம் சிக்கியது


கீழடியில் பழங்கால தங்க ஆபரணம் சிக்கியது
x
தினத்தந்தி 30 April 2021 5:48 PM GMT (Updated: 30 April 2021 5:48 PM GMT)

7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது கீழடியில் பழங்கால தங்க ஆபரணம் சிக்கியது.

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. பின்பு கொந்தகை, அகரம் ஆகிய பகுதியிலும் அகழாய்வு பணிகள் நடந்தது. கீழடியில் பாசி, மணிகள், தாயக்கட்டை கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் மற்றும் மனித மண்டை ஓடுகள், எலும்புகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. அகரத்தில் 2 குழிகள் தோண்டப்பட்டு மண்பாண்ட ஓடுகள், சிறிய, பெரிய நத்தை கூடுகள், சேதமடைந்த பானைகள் என கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 3-வது குழி தோண்டப்பட்டது. அந்த குழியில் சேதமடைந்த நிலையில் 3 பானைகள் தொடர்ச்சியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் கீழடியில் நேற்று அகழ்வாராய்ச்சி பணியின் போது காதில் அணியும் பழங்கால தங்க வளைய ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வளையத்தை நீட்டினால் 4.5 செ.மீ. நீளமும், வளையமாக இருந்தால் 1.99 செ.மீ. விட்டமாக உள்ளது எனவும் தெரிய வருகிறது.  இதை ஆய்வுக்கு அனுப்பினால் தான் எந்த காலத்தில் பயன்படுத்தியது என தெரிய வரும்.



Next Story