கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பஞ்சாமிர்தம்


கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பஞ்சாமிர்தம்
x
தினத்தந்தி 30 April 2021 7:50 PM GMT (Updated: 30 April 2021 7:50 PM GMT)

திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் திண்டுக்கல் மாநகராட்சியும் ஒன்றாகும். திண்டுக்கல் மாநகராட்சியில் மட்டும் கடந்த 1½ மாதத்தில் 400-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் 16 இடங்கள், கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றப்பட்டு, அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல் தடுப்பூசி போடுதல், கபசுர குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளும் நடக்கின்றன.
இதில், மாநகராட்சியின் சுகாதார பிரிவு அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், 2 ஆயிரம் டப்பா பஞ்சாமிர்தம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. இதனை பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா 2 டப்பா பஞ்சாமிர்தம் வழங்கினார்.

Next Story