கூடலூர் பகுதியில் ரூ.10¼ கோடி வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


கூடலூர் பகுதியில் ரூ.10¼ கோடி வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 30 April 2021 7:58 PM GMT (Updated: 30 April 2021 8:04 PM GMT)

கூடலூர் பகுதியில் ரூ.10¼ கோடி வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கூடலூர்,

கூடலூர் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதியில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மாக்கமூலா முதல் குன்னுமேடு வரை ரூ.6 லட்சம் செலவில் அமைத்த கான்கிரீட் சாலையை பார்வையிட்டார். பொதுப்பணித்துறை சார்பில்(நீர்வள ஆதார அமைப்பு) நெல்லிக்குன்னு கிராமத்தில் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் கால்வாய் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லீங்கரை முதல் மாச்சுவயல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் அமைத்த கான்கிரீட் சாலை மற்றும் ரூ.13 லட்சம் செலவில் தனியார் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் பாதையில் புதிதாக அமைத்த சாலையை பார்வையிட்டார்.

பின்னர் கூடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட நெலாக்கோட்டை முதல் விலங்கூர் வரை பிரதான் மந்திரி சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.353.64 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை, ஊரக சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் 13-ம் மைல் முதல் பெரும் பள்ளி வரை அமைத்த சாலையை பார்வையிட்டார். 

தொடர்ந்து பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் 13-ம் மைல் முதல் முதிரகொல்லி வரை ரூ.1 கோடியே 95 லட்சத்து 16 ஆயிரம் செலவில் நடைபெற்ற சாலை பணியையும் பார்வையிட்டார். பின்னர் ரூ.3 கோடியே 63 லட்சத்து 44 ஆயிரம் செலவில் அமைத்த பெண்ணை சாலையையும், 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் செலவில் சோலைக்கடவு - பெண்ணை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கான்கிரீட் சாலையையும்,

மூலதன மானியம் நிதி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் செலவில் அமைத்த பிதர்காடு ஸ்கூல் மட்டம் ஆதிதிராவிடர் காலனி சாலையையும், ரூ.13.68 லட்சம் செலவில் ஓடம்வயல் முதல் கொளப்பள்ளி வரை அமைத்த கான்கிரீட் சாலையையும் என மொத்தம் ரூ.10.25 கோடி செலவில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட ஊரட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமையல் கூடத்தையும், தோககண்டி ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2.50 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட 
நடைபாதையுடன் கூடிய தடுப்பு சுவர் கட்டும் பணியையும் பார்வையிட்டார். 

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமாலினி, கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன் குமாரமங்கலம், ஜெய்சங்கர் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story