100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார நிவாரணம் வேண்டும்


100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார நிவாரணம் வேண்டும்
x
தினத்தந்தி 30 April 2021 8:27 PM GMT (Updated: 30 April 2021 8:27 PM GMT)

55 வயதுக்கு மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அகில இந்திய விவசாய கூலி தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்

விருதுநகர், 
55 வயதுக்கு மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அகில இந்திய விவசாய கூலி தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்
பாதிப்பு 
இதுகுறித்து அகில இந்திய விவசாய கூலி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் பூங்கோதை கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- 
கிராமப்புற தொழிலாளர்கள் கடந்த ஓராண்டாக வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாகவும் வாழ்வாதாரம் இல்லாத நிலையிலும் கிராமப்புற கூலி தொழிலாளர் குடும்பத்தினர் சிரமமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 எனவே அவர்களது நலன் கருதி கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுகிறோம். கிராமப்புறங்களில் 100 நாள் வேலைத்திட்டம் பயனாளிகளில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களுக்கு வேலை வழங்கப்படாத நிலையில் வாழ்வாதார நிவாரணம் வழங்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் 
100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு முழுமையாக வேலை வழங்குவதுடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊர் திரும்பியுள்ள நிலையில் அவர்களுக்கு குறைந்த பட்சம் 200 நாட்கள் வேலை வழங்குவதுடன் தினசரி ஊதியமாக ரூ.600 உயர்த்தி தர வேண்டும். பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் முழுமையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

Next Story