சேலம் மாவட்டத்தில் புதிதாக 547 பேருக்கு தொற்று உறுதி: கொரோனாவுக்கு 10 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் புதிதாக 547 பேருக்கு தொற்று உறுதி: கொரோனாவுக்கு 10 பேர் பலி
x
தினத்தந்தி 30 April 2021 9:17 PM GMT (Updated: 30 April 2021 9:17 PM GMT)

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலியாகினர். மேலும் 547 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலியாகினர். மேலும் 547 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை மையங்கள் 
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு 41 ஆயிரத்தையும் தாண்டியது. மாவட்டத்தில் 5 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 30 தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர 7 இடங்களில் தற்காலிகமாக கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக மேலும் சில இடங்களில் தற்காலிகமாக சிகிச்சை மையங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
547 பேர் பாதிப்பு
மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 513 பேர் பாதிக்கப் பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 547 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆத்தூரில் 27 பேர், வீரபாண்டியில் 24 பேர், ஓமலூரில் 21 பேர், தலைவாசல், சேலம் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தலா 19 பேர், தாரமங்கலத்தில் 16 பேர், மேச்சேரி, கொளத்தூர், நங்கவள்ளி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 15 பேர், சங்ககிரி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 13 பேர், எடப்பாடியில் 14 பேர், காடையாம்பட்டி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 12 பேர், பெத்தநாயக்கனபாளையத்தில் 11 பேர், கெங்கவல்லியில் 7 பேர், கொங்கணாபுரம், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், மகுடஞ்சாவடி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேருக்கும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
41 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 439 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 559 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 3 ஆயிரத்து 503 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
10 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சேலத்தை சேர்ந்த 60, 48, 55, 71 ஆகிய வயதுடைய ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தனர். இதேபோல் 71 வயதுடைய முதியவர் ஒருவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலியானார்.
மேலும் 50, 63, 52, 58 வயதுடைய ஆண்களும், 59 வயதுடைய பெண் ஒருவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு 520 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story