தலமலை வனச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து சோதனை சாவடியை மலைக்கிராமமக்கள் முற்றுகை


தலமலை வனச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து சோதனை சாவடியை மலைக்கிராமமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 30 April 2021 10:33 PM GMT (Updated: 30 April 2021 10:33 PM GMT)

தலமலை வனச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து சோதனை சாவடியை மலைக்கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.

தாளவாடி
தலமலை வனச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து சோதனை சாவடியை மலைக்கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.
சோதனை சாவடியை முற்றுகை
தாளவாடி மலைக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் தலமலை வனத்துறை சோதனை சாவடியில் நேற்று பகல் 11 மணி அளவில் ஒன்று திரண்டனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் தலமலை வனச்சரக அலுவலர் சுரேஷ்குமார், தாளவாடி துணை தாசில்தார் ஜெகநாதன், வருவாய் ஆய்வாளர் ராக்கிமுத்து, ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் ருத்ர செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் அங்கு வந்து, மலைக்கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மலைக்கிராம மக்கள் கூறியதாவது:-
அனுமதி மறுப்பு
தாளவாடி மலைப்பகுதி கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் செல்ல வேண்டுமானால் கர்நாடக மாநிலத்துக்குள் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்துதான் தமிழக பகுதியில் செல்லமுடியும்.
தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் வழியாக செல்ல வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாற்று பாதையான தலமலை வழியாக பஸ், கார், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன ஓட்டிகள் அவதி
தலமலை வனச்சாலை என்பதால் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் கட்டாய கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. இதனால் வாகனங்கள் வனத்துறை சோதனை சாவடியில் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே வாகனங்கள் சோதனை சாவடி வழியாக அனுமதிக்கும் நேரத்தை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ளதை கொரோனா காலம் முடியும் வரை இரவு 10 மணி வரை அனுமதிக்க வேண்டும். சோதனை சாவடியில் வாகனங்களுக்கு கட்டாய கட்டணம் வசூல் செய்யும்பட்சத்தில் தாளவாடி தாலுகாவை கர்நாடக மாநிலத்துடன் சேர்த்து விடுங்கள். இவ்வாறு மலைக்கிராம மக்கள் கூறினார்கள்.
ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
அதற்கு அதிகாரிகள், ‘இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். உடனே பொதுமக்கள், ‘தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story