கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்


கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்
x
தினத்தந்தி 1 May 2021 4:13 PM GMT (Updated: 1 May 2021 4:13 PM GMT)

திண்டுக்கல் பழைய கோர்ட்டு கட்டிடம், கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

முருகபவனம்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 17 ஆயிரம் பேர் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 390 படுக்கை, எம். வி.எம். மகளிர் கலைக்கல்லூரியில் 160 படுக்கை, பழனி அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளன. 

இதுதவிர காந்திகிராமம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி சிகிச்சை பிரிவுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால் போதிய படுக்கை வசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த கொரோனா நோயாளிகள் படுக்கை இன்றி சிகிச்சை பிரிவுகளின் நடைபாதையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை உருவானது. 

இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத்துறை சார்பில் திண்டுக்கல்லில் உள்ள பழைய கோர்ட்டு கட்டிடத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதையொட்டி பழைய கோர்ட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அரசு செவிலியர் பயிற்சி பள்ளி, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள செசிலியாள் நடுநிலைப்பள்ளிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்பின்னர் பழைய கோர்ட் கட்டிடத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இந்த சிகிச்சை மையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. தரைத்தளம் உள்பட 3 தங்களை கொண்ட அந்த கட்டிடத்தில் 200 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

Next Story