கரூர்மாவட்டத்தில் இறைச்சி கடைகள் மூடல்


கரூர்மாவட்டத்தில் இறைச்சி கடைகள்  மூடல்
x
தினத்தந்தி 1 May 2021 6:33 PM GMT (Updated: 1 May 2021 6:33 PM GMT)

கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலியாக கரூர்மாவட்டத்தில் இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.

கரூர்
கொரோனா 2-வது அலை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக தமிழகத்தில் கடந்த 20-ந்தேதி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக அன்றைய தினம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள். தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததுடன் இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகள் உள்ளிட்டவையும் அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மீண்டும் தமிழக அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதில் சனிக்கிழமைகளிலும் இறைச்சிகடைகள் மற்றும் மீன் கடைகள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது.
இறைச்சிகடைகள் மூடல்
 இதன் ஒருபகுதியாக நேற்று கரூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜந்துரோடு, வெங்கமேடு, தாந்தோணிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட்டு இருந்ததுடன் காமராஜ் மார்க்கெட் பின்புறம் அமைந்துள்ள மீன் மார்க்கெட் கடைகளும் அடைக்கப்பட்டு, ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 
மேலும் கடைகள் இருக்கும் என்று நினைத்து வந்த பொதுமக்கள்  ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது.

Next Story