திண்டுக்கல் மாவட்டத்தில் பெண் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி


திண்டுக்கல் மாவட்டத்தில் பெண் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 1 May 2021 7:04 PM GMT (Updated: 1 May 2021 7:04 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். மேலும் 220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. அதேபோல் கொரோனாவால் அவ்வப்போது உயிரிழப்பும் நடக்கிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் வரை 210 பேர் கொரோனாவால் இறந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த 76 வயது முதியவர், 73 வயது முதியவர் மற்றும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 66 வயது முதியவர் மற்றும் 58 வயது பெண் ஆகிய 4 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 
இதையடுத்து பெண் உள்பட 3 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும், ஒரு முதியவர் திண்டுக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் 4 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்தது. 
இதற்கிடையே நேற்று மாவட்டம் முழுவதும் மேலும் 220 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அரசு மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 
இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 17 ஆக உயர்ந்தது. அதேநேரம் 298 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 14 ஆயிரத்து 225 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி 1,578 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story