6 மையங்களில் மட்டுமே இனி தடுப்பூசி


6 மையங்களில் மட்டுமே இனி தடுப்பூசி
x
தினத்தந்தி 1 May 2021 7:34 PM GMT (Updated: 1 May 2021 7:34 PM GMT)

திருப்பூர் மாநகராட்சி சார்பில் இனி 6 மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி சார்பில் இனி  6 மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
20 மையங்கள்
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணியும் மாவட்டம் முழுவதும் அதிகரிக்கப்பட்டது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளுக்கு நாள் தடுப்பூசி போட வருகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.
இதனால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் மாநகர பகுதிகளில் 20 மையங்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தற்போது இது குறைக்கப்பட்டுள்ளது.
6ஆக குறைப்பு
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது
திருப்பூர் மாநகர பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மினிகிளினிக்குகள் என 20 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதனால் பல இடங்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டு வந்தனர். தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், பொதுமக்களுக்கு சராசரியாக தடுப்பூசி கிடைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாநகரில் மாநகராட்சி சார்பில் 6 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. அதாவது டி.எஸ்.கே. நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், 15 வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம், எல்.ஆர்.ஜி.ஆர். ஆரம்ப சுகாதார நிலையம், கோவில்வழி ஆரம்ப சுகாதார நிலையம், சுண்டமேடு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 6 இடங்களில் தடுப்பூசி போடப்படும். இதன் பின்னர் பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப சில நாட்களுக்கு பிறகு கூடுதலாக மையங்கள் ஏற்பாடு செய்யப்படும். நாள் ஒன்றுக்கு 1,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்து வருகிறோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story