கடலூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக 330 பேருக்கு கொரோனா மேலும் 2 பேர் பலி


கடலூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக 330 பேருக்கு கொரோனா மேலும் 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 May 2021 7:36 PM GMT (Updated: 1 May 2021 7:36 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று 330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெண் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர்.

கடலூர், 

புதிய உச்சம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 30 ஆயிரத்து 144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 28 ஆயிரத்து 170 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் 327 பேர் பலியாகி உள்ளனர். நேற்று வெளியான பரிசோதனை முடிவில், மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக 330 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதில் பெங்களூரு, சத்தீஷ்கார், கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்தும், சென்னை, தஞ்சாவூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கடலூர் வந்த 36 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 51 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 243 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் நேற்று 2 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெண் பலி

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட புவனகிரியை சேர்ந்த 70 வயது முதியவர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 52 வயது பெண், பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த பெண்ணும், முதியவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மேலும் நேற்று மட்டும் 269 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 392 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.


Next Story