தடுப்பூசி போடும் பணி ஒத்திவைப்பு


தடுப்பூசி போடும் பணி ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 1 May 2021 7:38 PM GMT (Updated: 1 May 2021 7:38 PM GMT)

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி தட்டுப்பாடு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து தடுப்பூசி போடப்பட்டது.
இதன் பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கொரோனா தடுப்பூசி போட வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்ததால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேற்று முதல் தடுப்பூசி போடப்படும். இதற்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறி ஒரு இணையதள முகவரியை தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தடுப்பூசி செலுத்த பலரும் அந்த இணையதளத்தில் பதிவு செய்தனர். ஆனால் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது
தமிழக அரசு அறிவுறுத்தலின்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான தடுப்பூசி திருப்பூருக்கு வரவில்லை. இதனால் நேற்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியும் போடவில்லை.
ஏற்கனவே தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதிய அளவில் தடுப்பூசி வந்தவுடன், அரசு அறிவுறுத்தலின்படியும், அறிவிப்பு வந்ததும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story