தாரமங்கலம் அருகே 9 வயது சிறுமி கற்பழித்து கொலை-நெசவு தொழிலாளி வெறிச்செயல்


தாரமங்கலம் அருகே 9 வயது சிறுமி கற்பழித்து கொலை-நெசவு தொழிலாளி வெறிச்செயல்
x
தினத்தந்தி 1 May 2021 7:55 PM GMT (Updated: 1 May 2021 7:56 PM GMT)

தாரமங்கலம் அருகே 9 வயது சிறுமியை நெசவு தொழிலாளி கற்பழித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாரமங்கலம், மே.2-
தாரமங்கலம் அருகே 9 வயது சிறுமியை நெசவு தொழிலாளி கற்பழித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
நெசவு தொழிலாளி
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த தெசவிளக்கு கிராமம் கீழ் மாட்டையாம்பட்டி அருகே உள்ள பூவான் வளவு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவருடைய மகன் தனபால் (வயது 20), நெசவு தொழிலாளி. இவர் நேற்று மாலை 4 மணியளவில் கீழ் மாட்டையாம்பட்டி பகுதிக்கு வந்தார். 
அங்கு தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமியை பார்த்தவுடன் தனபாலுக்கு விபரீத ஆசை ஏற்பட்டது. அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்ட அவர், அந்த சிறுமியிடம் பக்கத்து தோட்டத்தில் நுங்கு வெட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி அங்கு அழைத்து சென்றார்.
கற்பழித்து கொலை 
அப்போது தனபால் அந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்து துன்புறுத்தியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அந்த சிறுமியை அவர் கற்பழித்துள்ளார். இதனால் பயத்தில் கூச்சல் போட்டு அலறிய சிறுமி அங்கிருந்து தப்பி ஓட முயன்றாள். 
அவள் ஊருக்குள் தப்பிச்சென்று நடந்த விவரங்களை கூறினால் தான் மாட்டிக்கொள்வோம் என்று தனபாலுக்கு பயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கிடந்த கல்லை எடுத்து அந்த சிறுமியின் தலையில் ஓங்கி அடித்ததுடன், தான் கையில் வைத்திருந்த கத்தியால் அந்த சிறுமியை சரமாரியாக அவர் குத்தினார். இதில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தாள்.
போலீசார் விசாரணை
இ்தனிடையே சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு தோட்ட காவலாளி ராமசாமி என்பவர் ஓடி வந்துள்ளார். அங்கு சிறுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். 
இதையடுத்து பொதுமக்களும், கிராம நிர்வாக அலுவலர் சங்கரும் அங்கு வந்து பார்த்தனர். மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இந்த கொடூர சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஓமலூர் போலீ்ஸ் துணை சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த சிறுமியின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
பிடிபட்டார்
அப்போது அந்த சிறுமியை நெசவு தொழிலாளி தனபால் அழைத்து சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனே தலைமறைவான அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
9 வயது சிறுமியை நெசவு தொழிலாளி கற்பழித்து கொன்ற கொடூர சம்பவம் தெசவிளக்கு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story