கொரோனா பரவல் கட்டுப்பாடு; நெல்லையில் இறைச்சி கடைகள் மூடல்


கொரோனா பரவல் கட்டுப்பாடு; நெல்லையில் இறைச்சி கடைகள் மூடல்
x
தினத்தந்தி 1 May 2021 8:06 PM GMT (Updated: 1 May 2021 8:06 PM GMT)

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நெல்லையில் இறைச்சி கடைகள் மூடப்பட்டன.

நெல்லை, மே:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று நெல்லையில் இறைச்சி கடைகள் மூடப்பட்டன.

இறைச்சி கடைகள் மூடல்

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் நெல்லை மாநகர பகுதியில் மட்டும் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருந்தன. பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, நெல்லை டவுன் வழுக்கோடை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதே போல் மீன் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
ஆனால் இதை அறியாமல் சில அசைவ பிரியர்கள் நேற்று காலை இறைச்சி கடைகளை தேடி சென்றனர். ஆனால் கடைகள் அடைக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

அதிகாரிகள் ஆய்வு

கொரோனா பரவல் புதிய கட்டுப்பாடுகளை மீறி இறைச்சி கடைகள் திறக்கப்பட்டதா? என்று மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் 2 நாட்கள் விடுமுறை என்பதால் சில வியாபாரிகள் தங்களது வீடுகளில் வைத்து இறைச்சிகளை பிரித்து பார்சல் செய்து வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்தனர்.

Next Story