மீன், இறைச்சி கடைகள் மூடல்


மீன், இறைச்சி கடைகள் மூடல்
x
தினத்தந்தி 1 May 2021 11:44 PM GMT (Updated: 1 May 2021 11:44 PM GMT)

ஊட்டி, கூடலூரில் மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டன. எனினும் காய்கறி வாங்க குறைந்த மக்களே வந்தனர்.

ஊட்டி

ஊட்டி, கூடலூரில் மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டன. எனினும் காய்கறி வாங்க குறைந்த மக்களே வந்தனர்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. 

அத்தியாவசிய தேவையான மருந்தகங்கள், பால் விற்பனையகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டும் வழக்கம்போல திறந்து இருக்கும். அரசு பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது. முழு ஊரடங்கையொட்டி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கூட்டம் குறைவு

முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதால் நேற்று அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஊட்டி உழவர் சந்தையில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இருப்பினும் கடந்த வாரத்தை விட நேற்று மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு வேண்டிய காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை வாங்கி சென்றனர். 

உழவர் சந்தையில் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்வதற்கு கிருமிநாசினி வைக்கப்படவில்லை. சமூக இடைவெளியை கடைபிடிக்க குறிப்பிட்ட இடைவெளியில் வட்டங்கள் போடவில்லை. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இறைச்சி கடைகள் மூடல்

இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை மீன், இறைச்சி வாங்க கூட்டம் அலைமோதியது. இதை கருத்தில் கொண்டு சனிக்கிழமை மீன், இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

அதன்படி ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள இறைச்சி கடைகள் மற்றும் பிற பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. கூடலூர், பந்தலூர், மசினகுடி, நடுவட்டம் பகுதியில் மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டது. இதனால் பல லட்சம் ரூபாய் வணிகம் பாதிக்கப்பட்டது.

முழு ஊரடங்கையொட்டி போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவசியம் இல்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story