10 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை


ஓட்டு எண்ணிக்கை
x
ஓட்டு எண்ணிக்கை
தினத்தந்தி 1 May 2021 11:46 PM GMT (Updated: 1 May 2021 11:46 PM GMT)

10 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை

கோவை

கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், சூலூர் மற்றும் வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 வாக்காளர்கள் உள்ளனர்.


இந்த தொகுதிகளுக்காக வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதில் மொத்தம் 21 லட்சத்து 5 ஆயிரத்து 673 பேர் வாக்களித்தனர். இது 68.32 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

பதிவான வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் சீல்வைக்கப்பட்டு கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி.) பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இன்று வாக்கு எண்ணிக்கை

இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் 438 அரசு ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.

 இதற்கு தேவையான டேபிள்கள், சேர்கள் மற்றும் இதர பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு, தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

வாக்கு எண்ணும் மையத்துக்கு வருபவர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி, முகக்கவசம் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

வாக்கு எண்ணும் அரசு ஊழியர்கள், முகவர்கள் என அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். 

அத்துடன் உடல் வெப்பம் பரிசோதனையில் 98.6 டிகிரி பதிவானால் அனுமதிக்கப்படமாட்டாது.

கண்காணிப்பு கேமரா

மின்னணு எந்திரங்கள் இருக்கும் கட்டுக்காப்பு அறையின் சீல் முகவர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டு டேபிள்களுக்கு கொண்டு வரப்படும். பின்னர் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 

ஒவ்வொரு டேபிள்களுக்கும் மேலே கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டர் அளவுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதற்கான குறியீடுகள் சாலையில் எழுதப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story