சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 14 வயது சிறுமிக்கு பிரசவம்; குழந்தை திருமணம் செய்த தாய்மாமன் போக்சோவில் கைது


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 14 வயது சிறுமிக்கு பிரசவம்; குழந்தை திருமணம் செய்த தாய்மாமன் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 1 May 2021 11:46 PM GMT (Updated: 1 May 2021 11:46 PM GMT)

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ராசிபுரத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. சிறுமியை குழந்தை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தாய்மாமனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

ராசிபுரம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ராசிபுரத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. சிறுமியை குழந்தை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தாய்மாமனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 
14 வயது சிறுமி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவள் 14 வயது சிறுமி. இந்த சிறுமியை, இவளது தாய்மாமனான லாரி டிரைவர் கடந்த ஆண்டு கடத்தி சென்று, ஒரு கோவிலில் வைத்து குழந்தை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் 2 பேரும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர். 
சிறுமி திருமண வயதை அடையவில்லை என்று தெரிந்தும் இரு தரப்பு பெற்றோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே சிறுமி கர்ப்பமானாள். 7 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சிறுமி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள்.
குழந்தை இறந்து பிறந்தது
இந்தநிலையில் நேற்று அதிகாலை சிறுமிக்கு பிரசவம் நடந்தது. அப்போது ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. சிறுமிக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்த சம்பவம் குறித்து ஆஸ்பத்திரி டாக்டர்கள் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினார். 
பின்னர் அவர் இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கே.ஆர்.மணி மற்றும் போலீசார் சிறுமியை குழந்தை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தாய்மாமன், இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் பெற்றோர் உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 
தாய்மாமன் கைது
பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி சிறுமியை கர்ப்பமாக்கிய தாய்மாமனை கைது செய்தனர். பின்னர் அவரை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிறுமியின் பெற்றோர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
14 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து தாய்மாமனே கர்ப்பமாக்கிய சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story