துபாயில் இருந்து சென்னைக்கு டி.வி.க்குள் மறைத்து கடத்திய ரூ.58 லட்சம் தங்கம் பறிமுதல்


துபாயில் இருந்து சென்னைக்கு டி.வி.க்குள் மறைத்து கடத்திய ரூ.58 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 May 2021 1:17 PM GMT (Updated: 2 May 2021 1:17 PM GMT)

துபாயில் இருந்து சென்னைக்கு டி.வி.க்குள் மறைத்து கடத்திய ரூ.58 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்திவரப்படுவதாக வந்த தகவலின் பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது பதுருதீன் (வயது 23) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அவரிடம் பெரிய வகையான எல்.இ.டி. டி.வி. இருந்தது. சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் அந்த டி.வி.யை பிரித்து சோதனை செய்தனர். அதில் டி.வி.க்குள் 2 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

ரூ.58 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக முகமது பதுருதீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story