அ.தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ. வெற்றி


அ.தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ. வெற்றி
x
தினத்தந்தி 2 May 2021 5:48 PM GMT (Updated: 2 May 2021 5:48 PM GMT)

வானூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் 21 ஆயிரத்து 727 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ. வெற்றிபெற்றார்.

வானூர், 

வானூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக சக்கரபாணி எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக வன்னியரசு, தே.மு.தி.க. வேட்பாளராக கணபதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக லட்சுமி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக சந்தோஷ்குமார், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக விநாயகமூர்த்தி, சுயேச்சை வேட்பாளராக சக்திவேல் ஆகியோர் போட்டியிட்டனர். 
விழுப்புரம் மாவட்டத்திலேயே குறைந்த வேட்பாளர்கள், அதாவது 7 பேர் மட்டுமே போட்டியிட்ட இந்த தொகுதியில் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடந்தது. 327 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 26 ஆயிரத்து 539 பேரில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 845 வாக்காளர்கள்  தங்களது வாக்கை பதிவு செய்தனர். அதாவது 79.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 

சக்கரபாணி எம்.எல்.ஏ. வெற்றி 

இந்த தொகுதியில் 7 பேர் போட்டியிட்டாலும் தற்போதைய எம்.எல்.ஏ.வான சக்கரபாணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வன்னியரசு, தே.மு.தி.க. வேட்பாளர் கணபதி ஆகியோர் இடையே போட்டி நிலவியது. விறுவிறுப்பான வாக்குப்பதிவு முடிந்ததும் சீல் வைக்கப்பட்ட மின்னணு எந்திரங்கள் அனைத்தும் ஆகாசம்பட்டில் உள்ள அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. 
இந்த ஓட்டுகள் அனைத்தும் நேற்று 24 சுற்றுகளாக எண்ணப்பட்டன. தொகுதியில் மும்முனை போட்டி ஏற்பட்டாலும் கூட சக்கரபாணி எம்.எல்.ஏ. முதல் சுற்றில் இருந்தே முன்னிலையில் இருந்து வந்தார். சக்கரபாணி எம்.எல்.ஏ. தபால் வாக்குகள் சேர்த்து மொத்தம் 92 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வி.சி.க. வேட்பாளர் வன்னியரசு 70 ஆயிரத்து 492 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து 21 ஆயிரத்து 727 வாக்குகள் வித்தியாசத்தில் சக்கரபாணி எம்.எல்.ஏ. வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான வெற்றி சான்றிதழ், அவரிடம் வழங்கப்பட்டது. 

Next Story