நாகையில், 2-வது நாளாக பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்


நாகையில், 2-வது நாளாக பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 9 May 2021 4:30 PM GMT (Updated: 9 May 2021 4:30 PM GMT)

இன்று முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் நாகை கடைத்தெருவில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் 2-வது நாளாக குவிந்தனர். மேலும் சலூன் கடைகளில் ஆண்கள் திரண்டனர்.

நாகப்பட்டினம்:
இன்று முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் நாகை கடைத்தெருவில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் 2-வது நாளாக குவிந்தனர். மேலும் சலூன் கடைகளில் ஆண்கள் திரண்டனர். 
கொரோனா 2-வது அலை 
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய்தொற்று பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி இரவு 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவை கடைபிடிக்கப்பட்டு வந்தது. பால், மருந்தகங்களை தவிர மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், டீக்கடைகள் ஆகியவை மதியம் 12 மணிவரை மட்டுமே இயங்க அனுமதி அனுமதிக்கப்பட்டு வந்தது. இருந்த போதிலும் நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது.
குவிந்த பொதுமக்கள் 
இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் நேற்று முன்தினமும், நேற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் 2 வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்ததால் நாகை கடைத்தெருவில் நேற்று 2-வது நாளாக கூட்டம் அலைமோதியது.
சலூன் கடைகளில் திரண்டனர் 
ஊரடங்கு நேரத்தில் மூடப்படும் கடைகளில் உள்ள தங்களுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். ஜவுளி கடைகள், பேன்சி ஸ்டோர்கள், மெக்கானிக்கல் ஒர்க் ‌ஷாப்கள், செல்போன் ரீசார்ஜ் கடைகள், ஆட்டோ மொபைல்ஸ் உள்ளிட்ட கடைகள் ஊரடங்கின்போது மூடப்படுவதால் அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதேபோல சலூன் கடைகளிலும் நேற்று 2-வது நாளாக ஆண்கள் திரண்டு வந்து முடி வெட்டி சென்றனர்.
திருமருகல்
கொேரானா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு இன்று(திங்கட்கிழமை) முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடித்து வந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கில் இருந்து தளர்வு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க  திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

Next Story