தூத்துக்குடி மாவட்டத்தில் 14 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் 14 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு
x
தினத்தந்தி 10 May 2021 2:08 PM GMT (Updated: 10 May 2021 2:08 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 14 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ்
நாடு முழுவதும் கொரோனா வைரஸஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 
இந்த தடுப்பூசிகளை போடுவதற்கு ஆரம்பகட்டத்தில் மக்களிடம் ஆர்வம் குறைவாக இருந்தாலும், தற்போது மக்கள் அதிக அளவில் தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். இதனால் கொரோனா தடுப்பூசிகளின் தேவையும் அதிகரித்து உள்ளது. ஆகையால் உடனுக்குடன் தடுப்பூசிகள் பெறப்பட்டு இருப்பு வைத்து போடப்பட்டு வருகிறது.
14 ஆயிரம் ஊசிகள் கையிருப்பு
அதன்படி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மொத்தம் 14 ஆயிரத்து 788 டோஸ்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. மக்களுக்கு தடையின்றி தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 
மாவட்டத்தில் 88 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை. மாவட்டத்தில் 65 ஆயிரத்து 374 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். இதில் 22 ஆயிரத்து 566 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டு உள்ளனர். தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story