ஆண்டிப்பட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் 18 தொழிலாளர்களுக்கு கொரோனா


ஆண்டிப்பட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் 18 தொழிலாளர்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 May 2021 4:14 PM GMT (Updated: 10 May 2021 4:14 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் 18 தொழிலாளர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கில் அண்ணா கூட்டுறவு நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் பெண்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 3 சுழற்சிகளாக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 
இதற்கிடையே தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்டத்தில் செயல்படும் அனைத்து ஆலைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கில் செயல்படும் அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு, சுமார் 355 தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 
இதனையடுத்து அண்ணா நூற்பாலை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஆலையில் கிருமிநாசினி தெளித்து, நோய் தடுப்பு பணிகளில் ஆலை நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

Next Story