காட்சி பொருளான குடிநீர் தொட்டி


காட்சி பொருளான குடிநீர் தொட்டி
x
தினத்தந்தி 10 May 2021 5:45 PM GMT (Updated: 10 May 2021 5:45 PM GMT)

குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர், மே.11-
கரூர் கணபதிபாளையத்தில் பயன்பாடு இன்றி கிடக்கும் குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் தொட்டி
கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் இருந்து காளியம்மன் கோவில் செல்லும் சாலையில் தென்றல் நகர் கணபதிபாளையம் உள்ளது. இந்த பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், காளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் குடிநீர் தேவைக்காகவும் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதன் அருகே குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
இந்த தொட்டியில் நீர்நிரப்பப்பட்டு அப்பகுதி மக்கள் குடிநீருக்காகவும், துணி துவைப்பதற்கும், ஆடு, மாடுகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் பயன்படுத்தி வந்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் குடிநீருக்காகவும், குளிப்பதற்காவும் பயன்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டது. அதுமட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டமும் குறைந்தது. இதனால் குடிநீர் தொட்டி பயன்பாடு இன்றி காட்சி பொருளானது.
பழுது நீக்க கோரிக்கை
இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேறு இடங்களுக்கு குடங்களை தூக்கி கொண்டு அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மின்மோட்டாரின் பழுதுநீக்கி குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story