ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் ஆய்வு: ‘சாத்தியம் உள்ள அனைத்து ஆலைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி’ அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி


ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் ஆய்வு: ‘சாத்தியம் உள்ள அனைத்து ஆலைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி’ அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
x
தினத்தந்தி 11 May 2021 5:48 AM GMT (Updated: 11 May 2021 5:48 AM GMT)

‘பெல் உள்ளிட்ட சாத்தியம் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருந்தால் பணி தொடங்கப்படும்’ என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

ஸ்ரீபெரும்புதூர், 

கொரோனா நோய்த் தொற்று வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்லும் காரணத்தினால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகள் பரிதாபமாக உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யும் தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 165 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அவை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் வேலூர், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.

அமைச்சர்கள் ஆய்வு

இந்நிலையில் தொழிற்சாலையில் தங்குதடையின்றி ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று திடீரென நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் பட்சத்தில் உரிய நேரத்தில் தங்குதடையின்றி வினியோகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஆக்சிஜன் தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 160 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையிலிருந்து 20 மெட்ரிக் டன்னாக உயர்த்தி நாளொன்றுக்கு 180 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும்.

பெல் தொழிற்சாலை

தங்குதடையின்றி ஆக்சிஜன் அனைத்து மாவட்ட ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு குறைந்து விடாமல் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள பெல் தொழிற்சாலையில் உட்பட சாத்தியமுள்ள இதர தொழிற்சாலைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வாய்ப்புகள் இருந்தால் உடனடியாக பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story