பெருந்துறை அருகே ரோட்டோரம் நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதியது; 4 பேர் பலி- டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்


பெருந்துறை அருகே ரோட்டோரம் நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதியது; 4 பேர் பலி- டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 May 2021 10:48 PM GMT (Updated: 11 May 2021 10:48 PM GMT)

பெருந்துறை அருகே ரோட்டோரம் நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் பலியானார்கள். டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெருந்துறை
பெருந்துறை அருகே ரோட்டோரம் நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் பலியானார்கள். டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். 
3 பேர் சாவு
பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் நாகேஸ்வரர் கோவில் முன்பு நேற்று காலை ரோட்டோரமாக லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த லாரியின் பின்புறம், சரக்குகளை ஏற்றி இறக்கும் கூலி தொழிலாளர்கள் 6 பேர் டீ குடிப்பதற்காக இறங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து ஈரோட்டை நோக்கி அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென நிலைதடுமாறியபடி லாரியின் பின்புறம் நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் மீதும் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் விஜயமங்கலம் மூங்கில்பாளையத்தை சேர்ந்த மெய்யப்பன் (35), ஊத்துக்குளி நடுப்பட்டியைச் சேர்ந்த முத்தான் (50), மூங்கில்பாளையத்தை சேர்ந்த கிட்டுசாமி (47) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 
படுகாயம்
அவர்களுடன் நின்று கொண்டிருந்த மூங்கில்பாளையத்தை சேர்ந்த ராம்குமார் (35), சின்னான் (50) மற்றும் செந்தில்குமார் (35) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மோதிய வேகத்தில் கார் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது. கார் டிரைவர் திருப்பூரை சேர்ந்த சபரி (27) இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தார். இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 
அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, லாரியின் அடியில்  சிக்கிய டிரைவரை மீட்டனர்.    பின்னர் இறந்த 3 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கதறல்
விபத்தில் படுகாயம் அடைந்த ராம்குமார், சின்னான், செந்தில்குமார் ஆகிய 3 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். கார் டிரைவர் சபரி, ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சின்னான் பரிதாபமாக இறந்தார். 
இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
இறந்த  4 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story