2 பேர் பலி


2 பேர் பலி
x
தினத்தந்தி 13 May 2021 1:39 PM GMT (Updated: 13 May 2021 1:39 PM GMT)

பொங்கலூர் அருகே வேன்மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே் பலியானார்கள். வேன் டிரைவர் உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொங்கலூர்
பொங்கலூர் அருகே வேன்மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே் பலியானார்கள். வேன் டிரைவர் உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
மோட்டார்சைக்கிள் பயணம்
தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த திருமலை என்பவரது மகன் அசோக் வயது 23. மதுரை உசிலம்பட்டி பழையூரை சேர்ந்த முத்து என்பவரது மகன் சுரேஷ் 25 மற்றும் சின்னபாண்டி 30, முத்துராஜ்28. இவர்கள் 4 பேரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். 
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக பனியன் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர். அதன்படி இவர்கள் 4 பேரும் தங்களது ஊருக்கு செல்ல முடிவு செய்தனர்.  இதைத் தொடர்ந்து சுரேஷ் மற்றும் அசோக் ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், சின்னபாண்டி மற்றும் முத்துராஜ் ஆகியோர் மற்றொரு  மோட்டார் சைக்கிளிலும் திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக நேற்று ஊருக்குப்புறப்பட்டனர்.
2 பேர் பலி
இவர்களது மோட்டார் சைக்கிள்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம்-தாராபுரம் சாலையில் துத்தாரிபாளையம் பிரிவில் வந்து கொண்டிருந்தது. அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி  வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் வேனும்,  2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன 
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுரேஷ் மற்றும் அசோக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சின்னபாண்டி மற்றும் முத்துராஜ் ஆகியோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். மேலும் 2 மோட்டார் சைக்கிள்களும் முற்றிலும் சேதமடைந்தது. 
3 பேருக்கு சிகிச்சை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சின்னபாண்டி மற்றும் முத்துராஜ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
மேலும் விபத்தில் உயிரிழந்த அசோக் மற்றும் சுரேஷ் ஆகியோரது உடலை கைப்பற்றிய போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த கரூரைச் சேர்ந்த வேன் டிரைவர் ராஜ்குமார் 30 அவரையும் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story