கொரோனா நிவாரணத்தொகை வாங்க நீண்ட வரிசையில் காத்து நின்ற பொதுமக்கள்


கொரோனா நிவாரணத்தொகை வாங்க நீண்ட வரிசையில் காத்து நின்ற பொதுமக்கள்
x
தினத்தந்தி 15 May 2021 9:57 PM GMT (Updated: 15 May 2021 9:57 PM GMT)

கொரோனா நிவாரணத்தொகை வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

கொரோனா நிவாரணத்தொகை வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
ரூ.2 ஆயிரம்
தமிழ்நாட்டில் அனைத்து  அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த உதவித்தொகை 2 கட்டங்களாக வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
முன்னதாக அனைத்து ரேஷன் கடைகளின் ஊழியர்களும் தினசரி 200 பேர் வீதம் நிவாரணத்தொகை பெறும் வகையில் டோக்கன்கள் வழங்கி உள்ளனர். அந்த டோக்கன்களில் குறிப்பிட்ட தேதியில் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று நிவாரணத்தொகை ரூ.2 ஆயிரத்தை பெற்றுக்கொள்ளலாம்.
நீண்ட வரிசை
ஈரோடு மாவட்டத்தில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ரூ.2 ஆயிரம் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கியது.
டோக்கன் பெற்ற ரேஷன் அட்டைதாரர்கள் காலையிலேயே கடைகளுக்கு வந்தனர். பல கடைகளிலும் பொதுமக்கள் தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அடையாளங்கள் இடப்பட்டு இருந்தன. அதில் நின்று வரிசையில் சென்று பணத்தை பெற்றுச்சென்றனர். மரப்பாலம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து நின்றனர்.
இதுபோல் ஈரோடு திருநகர் காலனி பகுதியில் உள்ள கடையில் நேற்றைய தேதியில் பணம் பெற டோக்கன் பெற்று இருந்தவர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று கொண்டனர். அப்போது சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது. ஆனாலும் குடையை பிடித்தபடி பொதுமக்கள் காத்து நின்று பணத்தை வாங்கிச்சென்றனர்.

Next Story