கரூர் அருகே ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற கோரிக்கை


கரூர் அருகே ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 16 May 2021 5:32 PM GMT (Updated: 16 May 2021 5:32 PM GMT)

கரூர் காந்திகிராமம் அருகே உள்ள ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
கரூர் தாந்தோணி ஒன்றியம் மூலக்காட்டானூர் பகுதிக்குட்பட்ட போக்குவரத்து நகர், அமராவதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு வாசிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காந்தி கிராமம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. 
இதையடுத்து கட்டளை காவிரி ஆற்றில் இருந்து பெரிய குழாய் மூலம் தண்ணீர் எடுத்து தொட்டியில் தண்ணீர் நிரப்பி குழாய் மூலம் மேற்கண்ட பகுதி பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. 
கான்கிரீட் பூச்சுகள்...
இந்தநிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைந்தது. மேலும் மேற்கண்ட பகுதிகளில் குடியிருப்புகளும் அதிகம் வந்ததால், இந்த பகுதியில் வேறொரு இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அதில் உள்ள கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து மிகவும் ஆபத்தான நிலையில் எப்போதும் வேண்டுமாலும் கீழே விழும் நிலையில் உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
 இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
===========

Next Story