தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரிகள் 2 பேர் கைது


தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரிகள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2021 6:11 PM GMT (Updated: 16 May 2021 6:11 PM GMT)

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் அன்பு என்கிற அன்பரசன் (வயது 32). சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக இவரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.  இவர் மீது சாராயம் கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரின் இத்தகைய நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அன்பரசனை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் கலெக்டருக்கு  பரிந்துரை செய்தார். இதையடுத்து அன்பரசனை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் அண்ணாதுரை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அன்பரசனை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகல்  கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர். 

செஞ்சி

இதேபோல் செஞ்சி அருகே நல்லாண்பிள்ளைபெற்றாள் அருகே போத்வாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (38). சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக இவரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.  இவர் மீதும் சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன.  இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் கோவிந்தசாமியை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசாருக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். அதன்படி கோவிந்தசாமியை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல், சிறையில் இருக்கும் அவருக்கு வழங்கப்பட்டது. 

Next Story