தேவையின்றி வெளியே சுற்றியவர்களை எச்சரித்த போலீசார்


தேவையின்றி வெளியே சுற்றியவர்களை எச்சரித்த போலீசார்
x
தினத்தந்தி 16 May 2021 7:00 PM GMT (Updated: 16 May 2021 7:05 PM GMT)

ஜெயங்கொண்டத்தில் ‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், தேவையின்றி வெளியே சுற்றியவர்களை எச்சரித்தனர்.

ஜெயங்கொண்டம்,

கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், பொதுமக்கள் மத்தியில் கொரோனா பற்றிய அச்சம் இல்லாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருக்கின்றனர். தேவையின்றி வாலிபர்கள் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் ஆகியோர் டிரோன் (ஹெலி கேமரா) மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இளைஞர்கள் கூட்டமாக சுற்றுவதும், பொதுமக்கள் தேவையின்றி பல இடங்களில் சுற்றித்திரிவதும், விளையாட்டு மைதானங்களில் கூட்டமாக நிற்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பினர்.

Next Story