கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கலெக்டர் கிரண்குராலா தகவல்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  3 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்  கலெக்டர் கிரண்குராலா தகவல்
x
தினத்தந்தி 21 May 2021 4:53 PM GMT (Updated: 21 May 2021 4:53 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாக கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

17,264 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 17 ஆயிரத்து 264 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 14 ஆயிரத்து 303 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 ஆயிரத்து 842 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 119 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர். 
மேலும் கொரோனா பரிசோதனை செய்யாமலும், பரிசோதனை செய்து தொற்று உறுதி செய்யப்படாமலும், கொரோனா அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இதுவரை 227 பேர் உயிரிழந்துள்ளனர். 

கட்டுப்பாட்டு பகுதிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில்-48, நகரப்பகுதிகளில்-35 ஆக மொத்தம் 83 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் 601 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், தியாகதுருகம், சங்கராபுரம், மணலூர்பேட்டை, வடக்கனந்தல் ஆகிய பேரூராட்சிகளிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுள்ளனர். 

தடுப்பூசி சிறப்பு முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு வட்டார மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 50 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. எனவே கொரோனா தொற்று ஏற்படாமல், உயிரிழப்பை தடுக்க தகுதி வாய்ந்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

உயிரிழப்புகளை தடுக்கலாம்

கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகளான தொண்டைவலி, தலைவலி, வாசனை இழப்பு, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், உடல் அசதி மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் ஆகியவை இருப்பின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் உயிரிழப்புகளை தடுக்கலாம். 
பொதுமக்கள் அத்தியாவசிய தோவையின்றி வெளியில் வரக்கூடாது. 
அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி, சமூக இடைவெளியை பின்பற்றி தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 




Next Story