கொரோனாவுக்கு கணவர் பலியானதால் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை ராமநகர் அருகே பரிதாபம்


கொரோனாவுக்கு கணவர் பலியானதால் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை ராமநகர் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 22 May 2021 4:37 PM GMT (Updated: 22 May 2021 4:37 PM GMT)

கொரோனாவுக்கு கணவர் பலியானதால் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை ராமநகர் அருகே பரிதாபம்

பெங்களூரு,

ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா பசவேசுவராநகரை சேர்ந்தவர் சதீஸ். இவரது மனைவி நந்தினி (வயது 28). சதீசை, கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காதலித்து நந்தினி திருமணம் செய்து கொண்டிருந்தார். பெஸ்காம் மின்வாரியத்தில் ஊழியராக நந்தினி வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் கர்ப்பிணியாக இருந்து வந்தார். இதற்கிடையில், சதீசின் தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்து விட்டார். தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சதீசுக்கும் வைரஸ் தொற்று பரவியது. இதையடுத்து, மைசூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

காதல் கணவர் உயிர் இழந்ததால் கடந்த 4 நாட்களாக நந்தினி மனம் உடைந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், நேற்று அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கனகபுரா டவுன் போலீசார் விரைந்து சென்று நந்தினியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாருக்கு கிடைத்தது. அதில், கணவர் உயிர் இழந்ததால், அவரை பிரிந்து தன்னால் வாழ முடியாது என்றும், அதனால் தற்கொலை முடிவை எடுப்பதாகவும் நந்தினி கூறி இருந்தார்.

இதுகுறித்து கனகபுரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொரோனாவுக்கு கணவர், மாமியார் உயிர் இழந்த நிலையில், கர்ப்பிணி தற்கொலை செய்த சம்பவம் கனகபுராவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story